ஞாயிறு, 12 டிசம்பர், 2021

புதன், 18 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் I.A.S. சும், தமிழக ஆட்சியும்?

தமிழகத்தில் பணியாற்றும் அதிகாரமிக்க பதவிகளில் தன்னை நம்பி கொடுத்த பொறுப்புகளை எந்த ஒரு சுய நலமுமில்லாமல் செயல் படும்  அரசு அதிகாரிகளை குறிப்பிட்டு சொல்லிவிடலாம். நான் அறிந்த அளவில்  அதில் தமிழக மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற ஒரு அதிகாரி உண்டென்றால் அது "  உமா சங்கர் " தவிர வேறு எவரும் இருக்க இயலாது . இந்த நிலையில் பல பதிவர்கள் அவருடைய ஊழலுக்கு எதிரான இந்த எதிர் போராட்டத்தில் மக்களும் துணை நிற்க வேண்டும். ஏனென்றால் ஆட்சியாளர்களின் நலனுக்காக மட்டுமில்லாமல் மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து கடமையாற்றியதால் தான் இன்று உமாசங்கருக்கு இப்படி ஒரு நிலைமை. இந்த நிகழ்வை பதிவர் "செந்தழல் ரவி" அவர்கள் குறித்த நேரத்தில் பதிவர்களின் கவனத்துக்கு எடுத்து சென்றது மிக சிறந்த பணிஎன்று குறிப்பிடலாம்.  

           அது போல பதிவர் "தருமி" அவர்களும் இது குறித்து மிகுந்த வேண்டுதலோடு ஒரு நேர்மையான அதிகாரியின் நேர்மையை பாராட்டி அவருக்கு துணை நிற்பதோடு அல்லாமல் அரசுக்கும் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டி இருந்தார். 

         தற்போது அரசு இந்த நிகழ்வு குறித்து கருத்து கூறும் அளவுக்கு மக்களை  இந்த நிகழ்வு சென்று அடைந்திருக்கிறது  என்பதை அரசு உணர்ந்தே இறங்கி வந்து கருத்து சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
         ஏற்கனவே இறங்கி வரும் செலவாக்கை எப்பாடு பட்டாவது தூக்கி நிறுத்த பல தகிடு தத்த வேலைகளை எடுத்து வரும் அதே வேளையில் கலைஞர் அரசின் இத்தகைய நடவடிக்கை எளிதில் யாரும் மறந்து விட இயலாது.

         திரு. உமாசங்கர் அவர்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து அவர் பணிசெய்த இடங்களில் பணியில்  தடையாக இருந்த பல அதிகாரிகளை அவர் தயவு காட்டாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். வாங்கும் சம்பளம் மக்களின் வியர்வையிலிருந்து வருவது என்பதை உணர்ந்து தான் பணியை ஆர்வத்துடன் செய்தவர் என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

         இந்த நேரத்தில் பதிவுலகம் சாதி , மத பேதங்களை கடந்து நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் போன்றவர்களுடைய வேண்டுகோள்.

         அதே சமயம் ஊழலில் ஊறித்திளைக்கும் எத்தனையோ அரசு அதிகாரிகள் இன்னும் இன்னும் என்று வாரி  சுருட்டும் வேலைகளில் வேகமாக நடைபோடுவதையும் நாம் அறியாததல்ல. அவர்களின் சாமரவீச்சில் சரிந்து கிடப்பவர் என்று தான் நிமிர்ந்து எழுவாரோ தெரியவில்லை.

       கலைஞர்   எதிர் காட்சியாயிருக்கும் போது ஆளும் கட்சியை காட்டமாக தாக்கி அறிக்கை விடுவது நாம் அறியாததல்ல. அதுவே ஆளும் கட்சியாகி விட்டால் ஏன்? ஏன்? இப்படி.

        இது தொடரும் .... இது முடிவல்ல ... என்பது நமக்கு தெரியும் ஏன் என்றால் ஆட்சி மாற்றம் என்பது வந்தே தீரும் அது மறு படியும் "ஜெயா மாமி" யாக இருக்க கூடாது. வந்தால்! அது மறுபடியும் தமிழகத்திற்கு சகோதரி "தாமரை" சொன்னது போல "அமாவாசை" தான்.

பொற்கோ
Posted by Picasa

செவ்வாய், 16 மார்ச், 2010

மத மாற்றமும், பெரியார் தாசனும் .....!?

"மதம் " என்பது "அபின்" போன்றது என்று கம்யூனிச தந்தை காரல் மார்க்ஸ் முதல் பல்வேறு அறிஞர் பெருமக்களும் இதுமாதிரியான சூழ்நிலைகளில் கூறிவந்துள்ளனர்.உலகம் முழுவதும் பெருவாரியான மக்கள் ஏதாவது ஒரு மதத்தை பின் பற்றியே வருகின்றனர்.

உலகம் முழுவதும் மதமாற்றம் நடைபெற்று வந்தாலும், தமிழ் நாட்டில் மதம் மாற்றம் ஒரு கவனத்தை பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணியாக இருப்பது ஊடகங்கள் தான். ஏனென்றால், இங்கு செயல்படும் ஊடக நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு மதத்தை பின்பற்றுவோரால் நடத்தப்படுபவை.

இவர்களின் சொந்த கருத்துக்களே மக்களின் கருத்தாக நிலைநிறுத்த தங்களின் பேனாக்களில் "மை" நிறப்புகிறவர்கள். யார் என்ன சொன்னாலும் அது குறித்து கவலை கொள்ளாதவர்கள்.

சரி அது கிடக்கட்டும். தமிழ் நாடு முழுவதும் பெரியாரியல் பரப்புனர்களில் குறிப்பிடத்தக்கவர். அடிக்கடி மதம் மாறும் அவருடைய செயலுக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளள தேவையில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் முதலில் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். என்பது பரவலாக எல்லோராலும் முன் வைக்கப்படும் கருத்து.

ஒரு முறை ஒரு கருத்தரங்கில் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் என்னை புத்த மதம் குறித்து ஆய்வு செய்ய வைத்தது. அதன் விளைவாக நான் இப்பொழுது என் பெயரை "சித்தார்த்தன்" என்று மாற்றிவிட்டேன் என்றார்.

நமக்கு ஒரு வசதி இருக்கிறது என்பதற்காக அதனை தாறுமாறாக பயன்படுத்தகூடாது.
இத்தனை நாளும் நல்ல மனிதனாக இருப்பது ஒன்று தான் மனிதனுக்கு சிறப்பு என்று பேசிய வாயால் "இன்சா அல்லாஹ்" என்று சொல்லி விடுவதன் மூலம் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறாரோ?

தன் மதமாற்றம் குறித்து அவர் அறிவித்துள்ள செய்தியை படித்த போது சிரிப்பு தான் வந்தது. காரணம் பேராசிரியர் இனியும் எந்த மத ஆராய்ச்சி நூல்களையும் ஆய்வு செய்யாத படிக்கு கவனித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் மேலும் பல மத நிறுவனங்கள் வாசல்களை திறந்து வைத்துள்ளன........!

வியாழன், 21 ஜனவரி, 2010

வீர வணக்கம்!!!








முத்துகுமரன் எனும் முத்தமிழின் சொத்து - நீ

முடங்களின் முகத்தில் காரி உமிழ்ந்தவன் நீ!

இனம் சாகும் போது சினம்கொண்டேழுந்தவன் - நீ

இருட்டு தேசத்தை புரட்டி போட்டவன் நீ!

புறநானூற்றின் புது வாரிசும் நீ!


உயிரால் உரையெழுதி உலகின் செவியில் ஓங்கி அறைந்தவனே

இன்றும், என்றும் உன் நினைவோடு ..........!


பொற்கோ








புதன், 20 ஜனவரி, 2010

ஆசை!


கவிதை எழுதிட ஆசை - அதில் நீ

கருவாக இருந்திட ஆசை!

கனவு காணவும் ஆசை - உன்போல்

நனவாய் மாறவும் ஆசை!

காற்றில் கலந்திட ஆசை - கள

மூர்க்கம் கற்றிட ஆசை!

பொதிகை மேல் நின்று - தமிழ்

பறை ஒலிக்க ஆசை!

தமிழ் கொடி ஏற்றி - நம்மோர்

நெஞ்சில் விதைக்க ஆசை!

எதிரியோடு மோதும் - களம்

கண்டு வர ஆசை!

தளையறுப்பான் கையில் - ஒரு

முத்தமிடவும் ஆசை!



ஆக்கம்

பொற்கோ










சனி, 16 ஜனவரி, 2010

நாடாளுமன்றத்தில் திருமா!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர்தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக தமிழ் சமுக அரசியல் களப்பணி ஆற்றி வரும் ஒரு ஆற்றல்மிக்க இளைஞர்.

தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். பெரும்பாலான தலைவர்களால் பாராட்டு பெற்றவர். தான் அரசியல் பணியின் மூலம் ஏராளமான போராட்டங்களை நடத்தியவர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் சாத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக போரடி பல வகையிலும் மக்கள் அமைதியாக வாழ துணை நின்றவர். அநீதிக்கெதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்தியவர்.

தமிழ் இன உணர்வாளர்கள் பலர் தேர்தல் கூட்டணி தயக்கங்களை மறந்து வாழ்த்தவேண்டும்.

பலர் நேரிலும்,தொலைபேசியிலும் வாழ்த்தியிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தான் இன்னும் தானும் வாழ்த்தாமல் தன கட்சிக்காரர்களையும் வாழ்த்துவதற்கு வழிவிடாமல் இருக்கிறார். என்ன இருந்தாலும் திருமா என் இன்னொரு மகனை போன்றவர் என் வீட்டுக்கு எப்பொழுதும் வரலாம் போகலாம் என்றார்.

ஆனால் இன்று வரை வாய் திறவாமல் இருக்கிறார். அய்யா! இது தான் தாங்கள் என் போன்ற அடுத்த தலைமுறைக்கு காட்டும் வழியா? பாடமா? புரியவில்லை! பாமக விடம் மாற்றம் வேண்டும் என் போன்ற தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.

கலவர மாவட்டமாக இருந்த வடக்கு மாவட்டங்களில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் இணக்கமான சூழ்நிலை எப்படி கலவரத்திற்கு முடிவுரை எழுதியதோ, அதே போன்று இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இணைந்து செயலாற்றினால் அது தமிழகத்தின் பொன்னேடுகளில் பொரிக்கப்பெரும்

ஏனென்றால்,
இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் இன உணர்வோடு ஈழ தமிழரின் அவல நிலை குறித்து பேச வேண்டும் என்றால் தோழர் மட்டும் தான் உண்டு அதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. எந்த தடுமாற்றமும், எந்த வகையான நிர்பந்தமும் இல்லாதவர். அதே நேரத்தில் இனம் பாதிக்கப்படும் துயரமான இந்த கால கட்டத்தில் துணிச்சலாக டெல்லிக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகிறார்.

இது தான் இன்றைய தேவை. காலம் அறிந்து செய்யப்படும் தோழரின் நல்ல முயற்சிக்கு அனைவரும் துணைநிற்போம். அப்படி துணை நிற்பதை கடமையாய் கொள்வோம். வாருங்கள் தமிழின சொந்தங்களே.........!
Posted by Picasa

புதன், 13 ஜனவரி, 2010

தமிழர் திரு நாள் (2010) ?!


" பொங்கல் திருநாள் " தமிழரின் மனமெல்லாம் பொங்கும் பெருநாள் என்று தமிழறிஞர் "பாவலரேறு பெருஞ்சித்திரனார்" அவர்கள் தமிழர்களின் வாழ்வியல் சார்புகள் குறித்து தாம் பங்கு பெரும் நிகழ்வுகளில் பேசும் பொழுது அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

திருநாள் என்றால் அந்த நாளுக்கென்று ஒரு சிறப்பு இருக்கும் அதனால் தான் அந்த சிறந்த நாளை திருநாள் என்று சொல்கிறோம்.

ஒரு திருநாளை மக்கள் கொண்டாடி மகிழ அவர்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் இணைந்து வாழ்கிறபோது தான் அந்த திருநாள் பெருமை படுத்தப்படும்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ் சமுகம் கொண்டாடி மகிழும் சமுக சூழல் இருக்கிறதா? என்றால்..........! இல்லை.

சில நிகழ்ச்சிகள் ஏதோ தானே நடப்பது போல தோன்றினாலும் அவைகளெல்லாம் தமிழரின் உணர்வுகளை (அமுக்கி) மழுங்கடிக்க வைக்கும் நிகழ்ச்சிகளாகவே நடந்து வருகிறது. தமிழனின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அவனுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தாத படிக்கு தேர்தல்களும், அதன் முலமாக ஒன்றாய் அணிதிரள வேண்டிய இனம் தன தலைவன் மற்றும் தலைவியிடம் தெண்டனிட்டு கிடக்கிறது.

தேர்தல் செலவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணத்தை தண்ணீராக இரைக்கிறார்கள் என்று எட்டு திக்கும் சிரிப்பாய் சிரிக்கிறது.

தமிழகத்தின் இன்றைய ஆட்டவும் , அசைக்கவும் முடியாத முதல்வர் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் உலகதமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளையும், முதல்வரின் மகள் கனிமொழி குழுவினர் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியையும் நிறுத்தி வைத்து உலக தமிழினம் கவலையோடும், கண்ணீரோடும் நிற்கும் மக்களின் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கவும், அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு ஆறுதல் சொல்லவும் தமிழ் சமுகத்தை வழிநடத்தும் ஒரு பெரும் பொறுப்பை காணா நிலையில் இருப்பதும் அது பற்றிய எந்த உணர்வுமற்ற நிலையில் தமிழம் இருக்குமென்றால் நாளை தமிழினம் பற்றிய கவலை அற்றவர்களாகவே நாம் நிறுத்தப்படுவோம்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளையும் இந்த ஆண்டு நிறுத்தி வைத்து , தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலையில், சென்னை சங்கமத்தின் உணர்வுகளையும், தமிழக அரசின் உணர்வுகளையும் தெரிவித்திருந்தால், இந்த தமிழ் புத்தாண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் சொன்னது போல உலகமெங்கும் சிதறி கிடக்கும் தமிழர் மனமெல்லாம் பொங்கும் பெருவிழாவாக இத்திருநாள் அமைந்திருக்கும். பொறுப்புள்ள தமிழர் சிந்திப்பர்!!!